Thursday, 22 September 2011

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது.

அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைப் பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கு வழி வகுத்தவர் தோழர் பெரியார்.

பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும், அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன...

38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:

(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.

(2) அரசு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல்.

39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:

அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;

(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை - கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;

(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;

(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;

(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;

(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.

40. கிராம ஊராட்சி அமைப்புகள்:

கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.

41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:

வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.

42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:

நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.

43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:

வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:

தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.

குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.

45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:

ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப் பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:

பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.

47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:

ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காகப் பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:

வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.

48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:

நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளைப் பாதுகாத்தல் வேண்டும்.

49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:

தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப் பொருட்கள் அல்லது வரலாற்றுச் சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.

50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:

அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

....என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப் பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோதத் தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத் துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. அனைத்துத் துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.

கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச் செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது. “சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப் பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித் தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.

இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது? அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா? இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை. இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

என்ன செய்யப்போகிறோம்?

(நன்றி: மக்கள் சட்டம்)

வரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்

• ஒரு பெண்ணின் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் செயல்படுவது, சொற்களைப் பயன்படுத்துவது, சைகையை காட்டுவது, குற்றமாகும்.

• வழக்கைத் தாக்கல் செய்யும் ஒவ்வொரு தரப்பினரும், நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் தங்களது தரப்பு வாதத்தை எடுத்துவைக்க நீதிமன்றங்கள் அனுமதி தருகின்றன. வழக்கு விசாரணை பகிரங்கமாக நடத்தப்படுகிறது. கற்பழிப்பு போன்ற சில வழக்குகளில் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது.

• இரண்டு திருமணம், விபச்சாரம், கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது, இது போன்ற வழக்குகளைக் குற்றவியல் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன.

கீழ்கண்ட சம்பவங்களில் தற்காப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மரணம் நிகழ்ந்தாலும், அத்தகைய தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியவர் மன்னிக்கப்படுகிறார்:-

• கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடக்கும்போது;

• கற்பழிப்பு அல்லது இயற்கைக்கு விரோதமான காம உணர்வை தனித்துக் கொள்ள ஒருவர் நடவடிக்கையில் இறங்கும்போது;

• அரசு அதிகாரிகளை அணுகி தனது விடுதலைக்காக முறையிட முடியாத அளவிற்கு ஒருவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கும் நேரத்தில்;

• 7 வயதிற்குக் குறைந்த குழந்தைகளது நடவடிக்கை குற்றமாகாது. சட்டத்தின் விளைவுகள், குற்றத்தின் தன்மைகளை உணரும் பருவம் அடையும் முன்னர், 12 வயது வரையுள்ள குழந்தைகளது நடவடிக்கையும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், அந்தக் குழந்தை தனது நடவடிக்கையின் முழு விளைவுகளையும் உய்த்துணரும் பக்குவத்தைப் பெறவில்லை. ஒரு குற்றம் நடக்கும்போது, அந்தக் குற்றத்தைச் செய்தவர் மனநோயாளியாக இருந்தால், அவர் மன்னிக்கப்படுகிறார். அதே நேரத்தில் மனநோயாளியைத் தாக்கிச் சமாளிக்க சட்டபடி உரிமையுண்டு.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)http://rmlcollegestudentbangalouruniversity.blogspot.com/http://rmlcollegestudentbangalouruniversity.blogspot.com/

பெண்களுக்கான சட்டத்தில் பல முரண்பாடான பிரிவுகள்


வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம் ஒரு வழியாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால அதில் பல முரண்பாடான பிரிவுகள் உள்ளன. அவை விவாதத்துக்குரியவை...
யாரும் அதைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. பெண்களே கூட அதைப் பற்றி விவாதிக்கக் கூச்சப்பட்டுக்கொண்டு விலகிக் கொள்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் உண்மையிலேயே பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனரா? இது பற்றிக் கேள்வி கேட்கும்போது பல பெண்கள் தெளிவில்லாத பதிலையே அளிக்கின்றனர். சிலர் கூடுதலாகப் பேச முன்வருகின்றனர். வேறு சிலர் இது ஒரு பிரச்சனையே இல்லை, வேலை செய்யும் இடங்களில் வரும் “தீங்கற்ற பாலியல் தொல்லைகளைச்” சமாளிப்பதற்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு தான் தேவை என்று தெரிவிக்கின்றனர்.
      ஆனால், பெண்கள் தங்கள் உரிமைகள் பற்றி மேலும் மேலும் விழிப்புணர்வு பெற்றுவருவதால் அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறாக அண்மையில் மும்பையில் பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்காவலர்கள் பேசியிருக்கிறார்கள், ஆசிரியைகள் பேசியிருக்கிறார்கள். வேறு பணிகளில் பணியாற்றும் பெண்களும் கூட அப்படிப்பட்ட துன்புறுத்தல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், இந்தப் பிரச்னையை வெளியே தெரிவிப்பதற்குத் தயங்குவதற்குக் காரணம் துன்புறுத்துவோருக்கும் அவர்களுக்கும் இடையில் பதவி நிலையில் இருக்கும் ஏற்றத்தாழ்வே ஆகும். முறையீடு செய்தால் வேலைக்கு ஆபத்து என்னும் நிலை இருக்கும்போது பெண்கள் வேலையைக் காப்பாற்றிக் கொண்டு  அமைதியாக இருந்து விடுவதையே தேர்ந்தெடுக்கின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் முறையீடு செய்ய விரும்பினாலும் கூட, பெண்கள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக தருவதற்கு முழு நம்பிக்கைக்குரிய, பக்கச்சார்பு இல்லாமல் விசாரிக்கக் கூடிய அமைப்பு முறைகள் பெரும்பாலான நிறுவனங்களில் இருப்பதில்லை.
பயன்தராத வழிகாட்டுதல்கள்
1997ல் விசாகா எதிர் இராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றே இதுவரை இந்தப் பொருளில் முன்னுதாரணமாகச் செயல்படக்கூடியதாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சட்டம் இல்லாதபோது, வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகளை நீதிமன்றம்  வகுத்தது. இது போன்ற முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு உள் விசாரணைக் குழுக்களை அமைக்குமாறு வேலையளிப்போரைக் கேட்டுக் கொள்வதும் இவ்வழிகாடுதல்களில்  அடங்கும். ஆனால இது முறையாகச் செயல்படும் நிறுவனங்களில் வேலைசெய்யும் பெண்களுக்கு மட்டுமே உதவும்.
முறைசாரா நிறுவனங்களில் வேலை செய்யும் பல லட்சக்கணக்கான பெண்களின் நிலை என்ன? மேலும் இவை வழிகாட்டுதல்கள் மட்டுமே சட்டம் அல்ல என்பதால் இவை வழக்கமாகவே புறக்கணிக்கப்பட்டன அல்லது தீவிரமாகக் கடைபிடிக்கப் படவில்லை. இவ்விதமாக, குழுக்கள் அமைக்கப்பட்ட நிறுவனங்களில் அவை  இயங்குவதில்லை அல்லது அவை இருப்பதே பெண்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.
         வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் கொண்டுவரவேண்டும் அப்போது தான் அச்சட்ட விதிகளை மீறுவோருக்குத் தண்டனை வழங்க முடியும் என்று பெண்கள் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இறுதியாக, அத்தகைய ஒரு சட்டம் வந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து  பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் முன்வரைவு டிசம்பர் 7 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் கிருஷ்ணா திராத் அதைத் தாக்கல் செய்தார்.
      துரதிர்ஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் எந்தப் பணியுமே நடைபெறாத ஒரு அமர்வில் இது நடந்துள்ளது. 2ஜி ஊழல் காரணமாக பல நாட்களாக, வாரங்களாக பாராளுமன்றம் முடங்கிக் கிடந்தது. அதன் விளைவாக இது போன்ற ஒரு சட்டம் தொங்கு நிலையில் விடப்பட்டது. அது விவாதிக்கப்படுமா அல்லது விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படுமா அலலது நிலுவையிலேயே இருந்துவிடுமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிக்குத் திரும்புவார்களா என்பது யாருக்கும் தெரியாது.
                                   
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தபட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை  என்றாலும் கூட, அது சட்டமாக்கப்படுவதற்கு முன்னதாக விளக்கமாக விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கையில் அந்த சட்ட முன்வரைவு பின்வருமாறு தெரிவிக்கிறது “வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் சமத்துவம், உயிர்வாழும் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதாகக் கருதப்படுகிறது. அது வேலைச் சூழலில் பாதுகாப்பின்மையையும் பகைமையையும் உருவாக்குகிறது. அது வேலையில் பங்கேற்பதில் பெண்களின் ஊக்கத்தை குன்றச்செய்து அதன்மூலம் அவர்களுடைய சமூகப் பொருளாதார அதிகாரம் பெறுதலையும், உள்ளடங்கிய வளர்ச்சிக் குறிக்கோளையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது.”
       
  அச்சட்டம் வேலையளிக்கும் முதலாளி ஒவ்வொருவரும் தமது நிறுவனத்தில் முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு ஒரு உட்குழு நிறுவ வேண்டும் என்று கூறுகிறது. மேலும் அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் பெண்களின் முறையீடுகளை விசாரிப்பதற்கான மாவட்ட மட்டத்திலான உள்ளூர் குழுக்களை நிறுவுவதையும் கட்டாயமாக்குகிறது. பின்னது குறிப்பாக மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் பெரும்பான்மையான பெண்கள் அமைப்புசாரா துறைகளில் தான் வேலை செய்கின்றனர். முறையான நிறுவனங்களுக்கு மட்டுமே என்று இச்சட்டம் வரையறுக்கப்படுமானால் இவர்கள் இச்சட்டத்தின் எல்லைக்கு வெளியே இருப்பார்கள்.      
    முறையீடு செய்யும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் துன்புறுத்துவோருக்குத் தண்டனை வழங்குவதற்கும் இச்சட்டம் விதிமுறைகளை வகுத்துள்ளது. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் போலவே இச்சட்டத்தின் கீழும் முறையிடும் பெண்கள் அல்லது சாட்சிகள் பெயர்கள் மற்றும் முகவரிகளை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.                               
          இருப்பினும் இச்சட்டம் பல முக்கியமான நடவடிக்கைகளில் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்கள்  இச்சட்டத்தின் எல்லைக்குள் சேர்க்கப்படவில்லை. நமது பெருநகரங்களில் பல லட்சக்கணக்கான பெண்கள் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இச்சட்டத்தின் எல்லைக்குள் சேர்க்கப்படாதது வியப்பாக இருக்கிறது. ஒரு திரைப்பட நடிகரால் வீட்டு வேலை செய்யும் பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த வழக்கு இன்னும் மும்பை நீதிமன்றங்களில் விசாரிக்கப் பட்டு வருகிறது. இது போன்ற பல வழக்குகள் முறையீடு செய்யும் கட்டதிற்கே வந்து சேர்வதில்லை. அப்பெண்கள் தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வதே பெரும்பாலும் நடக்கிறது.
மும்பையில் வீட்டுவேலை செய்யும் ஒரு சில பெண்களிடம் நான் விளக்கமாக விவாதித்து அவர்கள் தமது சொந்த தற்காப்பு முறையை அமைத்துக் கொண்டுள்ளதை அறிந்தேன். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டது தெரிய வரும்போது அவர்கள் அதை முடிந்தவரை அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக இளம்பெண்களுக்குத் தெரிவித்து அந்த வீட்டுக்கு வேலைக்குச் செல்லாதவாறு தடுக்கின்றனர். எனவே, வேலை செய்யும் இடங்களில்  பிற பெண்களை விடக் கூடுதலாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள வீட்டுவேலை செய்யும் பெண்களை அரசாங்கம்  ஏன் இச்சட்டத்தில் சேர்த்துகொள்ளவில்லை என்பதற்கு விளக்கமளிக்கப் படவில்லை.
விவாதத்துக்குரிய பிரிவுகள் 
ஒரு முறையீட்டைப் பதிவு செய்த பெண் தான் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதை மெய்ப்பிக்க முடியாதபோது அவள் தண்டிக்கப் படவேண்டும் என்று கூறும் இச்சட்டப் பிரிவு மர்மமானதாக இருக்கிறது. சில பெண்கள் இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் ஒரு நிறுவனத்தின் உட்குழு ஒரு பெண்ணின் முறையீட்டில் நம்பிக்கையில்லை என்று கூறும் ஒரு சொல்லே அவரைத் தண்டிப்பதற்குப் போதுமானதாக இருக்கமுடியுமா? பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படும் ஒரு பெண் அதை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கமுடியாமல் போனால் அதற்காக அவர் தண்டிக்கப்படுவதில்லை. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பெரும்பாலும் நீதிமன்றங்களில் தோற்றுவிடுகின்றன. ஏனென்றால் அரசுத் தரப்பால் அந்த வழக்கை போதுமான அளவுக்கு வலுவாக நடத்த முடிவதில்லை அல்லது நடத்துவதில்லை.                       
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தமது வழக்கை மெய்ப்பிக்க பெண்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. பாலியல் வன்புணர்ச்சியில் உடல் ரீதியான சான்று இருக்கிறது. சொற்களையும் சேட்டைகளையும் கொண்ட  தொல்லையை எதைக் கொண்டு மெய்ப்பிப்பது? சம்பந்தப்பட்ட ஆணும பெண்ணுமே உண்மையை அறிவர். யாருடைய சொல் ஏற்றுக் கொள்ளப்படும்? இத்தகைய வழக்குகள் பலவற்றிலும் போல, அதிகாரச் சமநிலை எப்போதும் பெண்களுக்கே மிகவும் எதிராக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலை மெய்ப்பிப்பது இன்னும் கடினமானதாக ஆகிவிடுகிறது. இந்தப் பின்னணியில், தண்டனைப் பிரிவு இருக்குமானால் தாம் தண்டிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை மெய்ப்பிக்கும் முயற்சியிலிருந்தே விலகி ஒடிவிடுவர்.
          பாராளுமன்றத்தின் கடந்த அமர்வில் விவாதிக்கப்பட்டிருக்க  வேண்டியவற்றில் இவை சில முக்கியமான கேள்விகளாகும். இந்தச் சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் இறுதியாக விவாதத்திற்கு வரும்போது நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும், இவ்விசயங்களில் நமது பாராளுமன்ற வரலாற்றைப் பார்க்கும்போது, அவர்களில் மிகப் பலர் ஒரு சிறிய அளவுக்கேனும் இச்சட்ட முன்வரைவு  குறித்து  ஏதாவது தீவிர அக்கறை செலுத்துவார்கள் என்பது ஐயத்திற்கு இடமானதே. இச்சட்டத்தின் உருவாக்கத்தில் பலப்பல பெண்கள் அமைப்புக்கள் பெருமுயற்சி எடுத்தபிறகு அச்சட்டம் இப்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்ப்படுமானால் அது துரதிர்ஷ்டமானதாகவே இருக்கும்.

Tuesday, 13 September 2011

போலிநிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..?


போலிநிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..?
சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.





அதுதான்; ஆனா அது இல்லை..!
பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்…

Friday, 9 September 2011

DR.RAMMANOHAR LOHIA COLLEGE OF LAW OLD STUDENTS RAVIKUMAR: நீ கடை பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம் பொய் சொல்லா...

DR.RAMMANOHAR LOHIA COLLEGE OF LAW OLD STUDENTS RAVIKUMAR: நீ கடை பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம் பொய் சொல்லா...: பொய்யில்லா வாழ்க்கை உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். பொருள் : உள்ளத்தால் பொய் சொல்லாது நேர்மையாக வாழ்பவன் உல...

எல்லை மீறினால் எதுவும் துன்பமே

ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.

நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.
அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.

துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.

நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.

ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

தெளிவிலாதேன…

எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்குமதானே?

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகின்றானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்தாக வேண்டும்

சிந்தனைகள்

· நண்பனே! முதலில் மனிதனாய் இரு. பிறகு நீ விரும்புவன அனைத்தும் உன்னைப் பின் தொடர்வதை நீ காண்பாய்.

· நம்மையே நாம் நம்பாதவரை நமக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படாது. உண்மையில் அனைவருள்ளும் கடவுள் இருக்கிறார்.

· மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

· மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும்; உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும், நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.

· மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகின்றானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்தாக வேண்டும்.

· உலகப் பெரியோர்கள் வாழ்க்கையை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் ஞான ஒளியைப் பெறுவதற்கு, இன்பத்தை விடத் துன்பமே – செல்வத்தைவிட வறுமையே – புகழை விட இகழே அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது தெரியவரும்.

நீ கடை பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம் பொய் சொல்லாமல் இருப்பது.


பொய்யில்லா வாழ்க்கை

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
பொருள்: உள்ளத்தால் பொய் சொல்லாது நேர்மையாக வாழ்பவன் உலகச் சான்றோர் உள்ளத்தில் புகழ் வடிவமாக நிலைத்திருப்பான்.
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்.
பொருள்:
  • குற்றமில்லாத நன்மைமட்டும் தருமானால் பொய்கூட வாய்மையாகக் கருதப்படும்.
  • குற்றமற்ற நன்மையைய் விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தை பெற்று விடும்.
  • பத்துப் பொய்யைச் சொல்வதனால் ஒரு பெண்ணின் திருமணம் நடந்து விடும் என்றால்அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
  • இருபது பொய்யைச் சொல்லி ஒரு குழந்தையை உன்னால் காப்பாற்றி விட முடியும் என்றால்அந்தப் பொய்யை நீ சொல்லலாம். பொய்மைவாய்மை ஆகிறது புரைதீர்த்த நன்மை பயக்கும் போது.
பொய்யாமை பற்றி இலக்கியங்கள் கூறுவது:
  • ஒரு பொய் பல உயிர்களைப் பலி வாங்கியது என்றும்,
  • ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும்,
  • ஒரு பொய் ஒரு குடும்பத்தையே பாழாகிற்று என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
பொய்யாமை பற்றி பழமொழிகள் கூறுவது:
  • பொய் சொன்னால் 'நாக்கு வெந்து போகும்'
  • பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது
  • பொய் சொன்னால் வாயில் புற்று வைக்கும் என்றும் பழ மொழிகள் இன்றும் அறிவுறுத்துகின்றன.
எந்தப் பாவங்களை நீ செய்தாலும் கூடநீ கடை பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம் பொய் சொல்லாமல் இருப்பது.

வாழ்க்கை


வாழ்க்கை